Saturday, March 20, 2010

இயலாமையின் அச்சக்கூடு



பயம் சூல் கொள்கிற
இருட்போர்வையினுள்
நுழைகிற இக்கணம்
முழுதும் நிரப்பப்படாத
என் பயணக்கோப்பையின்
ததும்பக் காத்திருத்தலுக்காக
கள்ளப்பார்வையுடன்
நோக்குகிறது நான்

நீ வந்து
நிரப்பிய மிச்சம்போக
பேசிப்பேசி
என் வெளியே முளைவிட்ட
இறந்தகால விதைகளின்
வேர்க்குஞ்சுகள்
என்னுள் தேடிக்கண்டு
பற்றிப்பரவியபடி வளர்கின்றன

சேர்த்துக் கட்டியதை
அங்குமிங்கும் பார்வை அலைபாய
ஆவலான எச்சரிக்கையோடு
கலைத்துப்போடும்
குரங்கின் லாவகத்தோடு
விழுங்கிய இச்சைகளை மறந்து
ஒற்றை விரல் நீட்டி
கம்பீரமாய்ச் சுட்டி
எனையுரசிச் செல்கின்றன
என் இயலாமைகள்

- பொன்.வாசுதேவன்