
பயம் சூல் கொள்கிற
இருட்போர்வையினுள்
நுழைகிற இக்கணம்
முழுதும் நிரப்பப்படாத
என் பயணக்கோப்பையின்
ததும்பக் காத்திருத்தலுக்காக
கள்ளப்பார்வையுடன்
நோக்குகிறது நான்
நீ வந்து
நிரப்பிய மிச்சம்போக
பேசிப்பேசி
என் வெளியே முளைவிட்ட
இறந்தகால விதைகளின்
வேர்க்குஞ்சுகள்
என்னுள் தேடிக்கண்டு
பற்றிப்பரவியபடி வளர்கின்றன
சேர்த்துக் கட்டியதை
அங்குமிங்கும் பார்வை அலைபாய
ஆவலான எச்சரிக்கையோடு
கலைத்துப்போடும்
குரங்கின் லாவகத்தோடு
விழுங்கிய இச்சைகளை மறந்து
ஒற்றை விரல் நீட்டி
கம்பீரமாய்ச் சுட்டி
எனையுரசிச் செல்கின்றன
என் இயலாமைகள்
- பொன்.வாசுதேவன்