சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Monday, July 6, 2009

ஆத்மாநாமின் கனவும், யாத்ராவின் எறும்பின் பயணமும்

தற்செயல் நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருமுறை நகுலனை நேரில் சந்திக்கச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணனிடம் நகுலன் சொன்னதன் தொடர்ச்சியாக தோன்றிய எண்ணங்கள்தான் அவை.

தற்செயலாக நடக்கும் ஏதோவொன்று நம் வாழ்வுப் பேரேட்டின் சில பக்கங்களைப் புரட்டி நம்மை மாற்றி விடுகிறது. அப்போது ஏன் அவை தற்செயல் எனப்பட வேண்டும் ?

தற்செயல் நிகழ்வு ஒன்றின் திருப்பத்தை இப்பதிவின் இறுதியில் காணலாம்.

ஆத்மாநாம் என்ற கவிஞரின் மென்மையான அதே சமயத்தில் தீவிரமான எழுத்துக்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

குறுகிய காலத்தில் தீவிர சொற்தளத்தில் செயல்பட்டு காலத்தால் அழிக்கயியலாத கவிதைகளைப் படைத்தமைக்காக இன்றும், என்றும் பேசப்படக்கூடியவர்.

அவரது மற்றுமொரு கவிதையை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.

கனவு

என்னுடைய கனவுகளை

உடனே அங்கீகரித்து விடுங்கள்

வாழ்ந்து விட்டுப்போனேன்

என்ற நிம்மதியாவது இருக்கும்

ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு

நம் முகங்கள்

நேருக்கு நேர் நோக்கும்போது

ஒளி

பளிச்சிடுகிறது

நீங்கள்தான் அது

நான் பார்க்கிறேன்

உங்கள் வாழ்க்கையை

அதன் ஆபாசக் கடலுக்குள்

உங்களைத் தேடுவது

சிரமமாக இருக்கிறது

அழகில்

நீங்கள் இல்லவே இல்லை

உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன்

அந்த கோடிக்கணக்கான

ஆசைகளுள்

ஒன்றில்கூட நியாயம் இல்லை

தினந்தோறும் ஒரு கனவு

அக் கனவுக்குள் ஒரு கனவு

உங்களைத் தேடுவது சிரமமென்று

நான் ஒரு கனவு காணத்தொடங்கினேன்

உடனே அங்கீகரித்து விடுங்கள்

000

senthil_001 'யாத்ரா' என்ற சமகாலத்தைய கவிஞனை வலைப்பதிவர்கள் பெரும்பாலும் அறிந்திருக்கின்றனர்.

பொங்கி வழியும் காதலும், விரக்தியின் தீராத மோகமும், தனித்தே பறந்தலையும் ஒற்றைப் பறவையின் மனநிலையும் யாத்ராவின் கவிதைக் களன்களாக இருந்திருக்கிறது.

வாசித்ததும், ஊசியால் பிணைத்துத் தைத்துவிட்டது போன்ற ஒரு நிலையில் மனம் நெருக்கமேற் படுத்திக்கொள்கிறது.

கவிமனம் நம்மையும் தொற்றிக்கொண்டு கிளைகளாகப் பயணிக்கின்ற அனுபவம் யாத்ராவின் கவிதை வாசிப்பில் நிகழ்கிறது என்பதே உண்மை. அதனாலேயே விருப்பு வெறுப்பற்ற நிலையில் யாத்ராவின் கவிதைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எறும்பின் பயணம்

சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்.

000

சரி.. தற்செயல் நிகழ்வுக்கு வருவோம்.

திரும்பிய திசையெல்லாம் வாழ்வைச் சேரும் ஏதோவொரு வழியிருப்பதாய் நம்பிக்கையோடு பயணிக்கும் எறும்பினைப்போல வாழ்வில் பெருகியோடும் சகலத்தையும், ரசனையோடு வாழ்ந்து கொண்டாடும் கவித்தோழனும், மாப்பிள்ளை என்று என்னால் பிரியத்துடன் அழைக்கப்படுபவனுமான செந்தில்வேல் என்ற யாத்ராவிற்கு இன்று பிறந்த தினம்.

மற்றுமொரு தற்செயல் நிகழ்வு... இன்றைய தினம் என்றென்றைக்குமான கவிஞன் ஆத்மாநாமின் நினைவு தினம்.

யாத்ராவிற்கு....

வாசிப்பின் பிரியங்களாலும், எழுத்தின் நேசத்தாலும் வாழ்வைக் கொண்டாடிக் கழிக்க விரும்பும் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

தூறல்கவிதை ச.முத்துவேல்

28 பின்மொழிகள்:

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள் யாத்ரா..

பகிர்விற்கு நன்றி வாசு..

வெங்கிராஜா said...

அன்பு யாத்ராவுக்கு வாழ்த்துகள்.
நேரில் உங்கள் இருவரையும் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
அருமையான கவிதை இரண்டுமே.
கிட்டத்திட்ட ஒரே மன நிலையுடைய இருவேறு கவிஞர்களின் படைப்புகளையும் தந்தமைக்கு நன்றி அகநாழிகை சார். நேற்று அனுஜன்யா சாரிடம் இப்பேர்ப்பட்ட பரந்த மனப்பான்மை குறித்து சொல்லியிருந்ததே தான். சந்தோஷமாய் இருக்கிறது.

சென்ஷி said...

யாத்ராவிற்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

Vinod's DB2/Z Page said...

யாத்ராவின் வளர்ச்சி பாரட்டபட வேண்டிய விஷயம்...

மன்னிக்கவும் நேற்று உங்களிடம் நிறைய பேச வேண்டும் என நினைத்தேன், அலுவலகத்திலிருந்து அவசரமாக அழைக்கவே யரிடமும் முறையாக சொல்லிக்கொள்ளாமல் விடைபெற வேண்டியதாகிவிட்டது...

யாத்ரா said...

என்ன சொல்றதுன்னுதெரியல மாமா, தங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துகள் மிகவும் மகிழ்வளிக்கிறது. இந்த வலையுலகிற்கு வந்து எத்தனை உறவுகள் எனக்கு, அக்கா,அண்ணா, மாமா, தம்பி, நண்பர்கள், தோழிகள். என்றென்றைக்குமான தங்கள் அனைவரின் அன்பிற்கு என் நன்றிகள்.


//என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்து விடுங்கள் வாழ்ந்து விட்டுப்போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும் //

எப்பொழுதும் என் நினைவை விட்டு அகலாத கவிஞர் அவர்.
ஆத்மாநாம் குறித்த பகிர்வுக்கு மிக்க நன்றி. எனக்கு ஆத்மாநாமை எவ்வளவு பிடிக்கும் என்பதை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை.

என் திருவினை கவிதையில், அவர் மீதான என் நேசத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.

அவருக்காக நான் எழுதிய ஒரு கவிதை நினைவு வருகிறது.

அழைக்கும் பிம்பம்

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

( ஆத்மாநாம் நினைவாக )

தங்கள் வாழ்த்து தந்த மகிழ்ச்சியின் கூடவே, இப்போது இந்த கணம் என் மனது முழுதும் ஆத்மாநாம் நிறைந்து, இனம் புரியாத லேசானதும் அழுத்தமானதுமான உணர்வால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறேன்.

பைத்தியக்காரன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் யாத்ரா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Karthikeyan G said...

யாத்ரா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அ.மு.செய்யது said...

யாத்ராவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

உங்கள் தொகுப்பு அருமை வாசு சார்.

ச.முத்துவேல் said...

ஆமாம் வாசு, இந்த தற்செயலில் என்னவோ இருக்கிறது.

பதிவிலேயே என் சார்பாகவும்(நன்றி)வாழ்த்துச் சொல்லியிருந்தாலும் மீண்டும் இங்கே ஒருமுறை வாழ்த்துகிறேன் .

கலக்கிட்டீங்க.யாத்ராவின் புகைப்படத்தோடு.

உமாஷக்தி said...

வாழ்த்துக்கள் யாத்ரா!! வாசு உங்களுக்கும். ஆத்மாநாம் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். நீங்கள் சுட்டியிருக்கும் கவிதை மிகவும் பிடிக்கும். நண்பர் யாத்ராவை மதுரையில் சந்தித்தேன். அமைதியும் இனிமையும் உள்ள மனிதர். சிறந்த கவிஞராய் அவர் பரிமளிக்க வாழ்த்துக்கள்!

லவ்டேல் மேடி said...

தோழர் யாத்ராவுக்கு வாழ்த்துகள்....!!!

குடந்தை அன்புமணி said...

யாத்ரா- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு...!

Deepa said...

தம்பி யாத்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அருமையான பதிவு...

யாத்ரா தொடர்ந்து என்னைக் கவர்கிறார். தமிழ் வலையுலகிற்கு யாத்ரா ஒரு முக்கியமான வரவு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

யாத்ராவின் கவிதை அருமை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. யாத்ரா.

நீங்கள் பகிர்ந்து கொண்ட விதமும் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

யாத்ராவிற்கு வாழ்த்துகள்...

நல்லா பகிர்வுக்கு பாராட்டுகள் வாசு

kartin said...

many more hpy returns mate!!

Nundhaa said...

ஆத்நாம் அளவிற்கு பல சமயங்களில் யாத்ரா எழுதிவிடுகிறார் என்பது உண்மை தான் - நல்ல ஒப்பீடு - இவர் தான் யாத்ராவா ... அஜய் தேவ்கன் மாதிரி இருக்கிறார் - பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி - வாழ்துக்கள்

வால்பையன் said...

யாத்ராவின் கவிதையை படித்த போது நானே எறும்பாகி போன உணர்வு!

கவிதையல மட்டும் தான் கொலைவெறியை காட்டுறார்! நேரில் பார்த்தால் ”இந்த பூனையும்” கதை தான் ஞாபகம் வரும்!

உயிரோடை said...

யாத்ராவுக்கு வாழ்த்துகள். இரு கவிதைகளும். ஒப்பீடும் அருமை. சரி நீங்க முத்துவேல் அப்படியே எம்ம பேரையும் சேர்த்து போட்டு இருக்கலாமே. இனி பிறந்த நாள் பரிசுல இப்படி கூட்டா போட்டா நல்லா இருக்கும். சும்மா ஒரு sugession தான். படிக்கிறப்பக்கம் நறநறன்னு பல்லெல்லாம் கடிக்கப்படாது.

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் தம்பி யாத்ராவுக்கு....

பா.ராஜாராம் said...

சாதாரணமானவரிடமிருந்து
மிக அசாதாரணமான ஒரு
பகிர்வு..யாத்ரா முதல் அறிமுகம்
எனக்கு...அபாரமான வீச்சு யாத்ரா
உங்களுக்கு..பிறந்த நாளுக்கான அன்பும்!
வாசு அண்ணா.."அ"வை வேண்டுமென்றே
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்.
தான் ஆடாமல் போனால் என்ன
தசை ஆடும்தானே..

கார்த்திகைப் பாண்டியன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் யாத்ரா..:-)))))

" உழவன் " " Uzhavan " said...

இவர்களின் கவிதைகளோடு அழகாக அறிமுகம் செய்து, யாத்ரா அவர்களுக்கு வாழ்த்து சொன்னவிதம் அருமை.
இனிய நண்பர் யாத்ரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

யாத்ராவிற்கு வாழ்த்துகள்

மதன் said...

வாழ்த்துக்கள் யாத்ரா! :)

இரசிகை said...

ungal pathivu arumai..

yellame tharcheyalaaththaan nadakkirathu.. athai naam thaan koottch cherththuk kolla vendum!

atherkentru oru kavi manam vendum..

athu ungalukku irukkirathu..


yathra kku vazhththukal..:)

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...